வினா-விடைகள் செல்போன் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


வினா-விடைகள் செல்போன் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 10 Sep 2017 10:15 PM GMT (Updated: 10 Sep 2017 7:18 PM GMT)

வினா-விடைகள் செல்போன் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தர்மபுரி,

பொது நுழைவுத்தேர்வுகளுக்கான வினா-விடைகள் செல்போன் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தர்மபுரியில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார். அதுதான் இப்போதும் தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் தமிழக அரசு சட்டம் நிறைவேற்றி அதற்கான ஒப்புதல் பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் முயற்சி பலிக்காது.

அதே நேரத்தில் மத்திய அரசு நடத்தும் நீட் உள்ளிட்ட அனைத்து பொது நுழைவுத்தேர்வுகளையும் தமிழக மாணவ-மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் 412 பயிற்சி மையங்கள் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 54 ஆயிரம் வினா-விடைகள் மற்றும் வரைப்படங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும்.

பொது நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு வசதியாக இந்த வினா-விடைகள் குறுந்தகடுகளாக தயாரிக்கப்பட்டு இணையதளம் வழியாக கணினி மற்றும் செல்போன் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் செல்போன் மூலமாகவும் மாணவ-மாணவிகள் இந்த வினா-விடைகளை படிக்க முடியும். நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு பாடத்திலும் சிறந்து விளங்கும் வெளிமாநிலங்களை சேர்ந்த வல்லுனர்களை அழைத்து வந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில்கூட மாணவ- மாணவிகளுக்கு 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வினா-விடைகள் அடங்கிய கற்றல் கையேடுதான் வழங்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் வளர்ச்சிக்காக 8 திட்டங்களை அறிவிக்க உள்ளோம். அந்த திட்டங்கள் மூலம் 1 கோடி பேர் பயனடைவார்கள். தமிழகம் கல்வித்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக விரைவில் மாறும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

Next Story