ஓ.என்.ஜி.சி ஆழ்குழாய் கிணற்றின் கழிவு சேகரிக்கும் தொட்டியில் தீ விபத்து


ஓ.என்.ஜி.சி ஆழ்குழாய் கிணற்றின் கழிவு சேகரிக்கும் தொட்டியில் தீ விபத்து
x
தினத்தந்தி 14 Sep 2017 3:57 PM GMT (Updated: 14 Sep 2017 3:57 PM GMT)

வடகாடு அருகே ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஆழ்குழாய் கிணற்றின் கழிவு சேகரிக்கும் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.


வடகாடு,


ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காக புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு கல்லிக்கொல்லை, வானக்கண்காடு மற்றும் கோட்டைக்காடு உட்பட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைத்து ஆய்வு மேற்கொண்டது.

 இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

இதைக்கண்டித்து, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு மற்றும் கோட்டைக்காடு பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் இரண்டாம் கட்டமாக 156 நாட்களை கடந்தும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. நெடுவாசல், நல்லாண்டார்கொல்லையில் குடியிருப்பு மற்றும் விளைநிலங்கள் இருக்கும் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அந்த கிணற்றில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேகரிக்கும் தொட்டி உள்ளது.

அந்த தொட்டியில் கச்சா எண்ணெய் போன்று திரவ வடிவில் கழிவுகள் நிரம்பி இருந்தது. இந்த நிலையில் மாலை நல்லாண்டார்கொல்லையில் எதிர்பாராதவிதமாக அந்த கழிவு நீர் தொட்டியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அந்த தொட்டி முழுவதும் மளமளவென பரவி ஜுவாலையுடன் எரிந்ததால் அந்த பகுதியே புகை மண்டலமானது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மண்ணை கொட்டியும், தண்ணீரை ஊற்றியும் தீயை அணைக்கப்பட்டது.  இந்த தீவிபத்து சம்பவம் குறித்து வடகாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஓ.என்.ஜி.சி ஆழ்குழாய் கிணறு அருகே கழிவு சேகரிக்கும் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story