109-வது பிறந்தநாள்: அண்ணா உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை


109-வது பிறந்தநாள்: அண்ணா உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
x
தினத்தந்தி 15 Sep 2017 10:22 PM GMT (Updated: 15 Sep 2017 10:22 PM GMT)

அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவபடத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், க.அன்பழகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரான அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணாவின் உருவசிலை மலர் மாலைகளால் சூழப்பட்டும், அதற்கு கீழே அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்தும் வைக்கப்பட்டு இருந்தது.

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக அண்ணாவுக்கு மரியாதை செலுத்த வந்த மு.க.ஸ்டாலினுக்கு, தி.மு.க. தொழிற்சங்க அமைப்பான தொ.மு.ச. நிர்வாகிகள் வழிநெடுகிலும் நின்று ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

க.அன்பழகன், கனிமொழி எம்.பி

அதனைத்தொடர்ந்து தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகன், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ஜே.அன்பழகன், பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்களும் அண்ணா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் ந.சேதுராமன் அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

என்.ஆர்.தனபாலன் - ஏ.நாராயணன்

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நிர்வாகிகளும், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் ஏ.நாராயணன் தலைமையில் நிர்வாகிகளும் தனித்தனியே அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

Next Story