ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அழைப்பு


ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அழைப்பு
x
தினத்தந்தி 22 Nov 2017 2:54 PM GMT (Updated: 22 Nov 2017 7:42 PM GMT)

ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த அனைவரும் வர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

சென்னை,

டிசம்பர் 5-ந் தேதி முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த அனைவரும் வர வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அ.தி.மு.க. (அம்மா, புரட்சித் தலைவி அம்மா) ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக மக்களுக்காகவும், அ.தி.மு.க. தொண்டர் ஒவ்வொருவருக்காகவும் தன்னையே அர்ப்பணித்து, மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தவ வாழ்வு வாழ்ந்த ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியை கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் தாங்கள் ஜெயலலிதா மீது கொண்டிருக்கும் அளவற்ற பாசத்தின் வெளிப்பாடாக நடத்திட நம் உள்ளம் துடிக்கிறது.

ஜெயலலிதாவின் உலகளாவிய புகழை பறைசாற்றும் வண்ணமும், ஜெயலலிதா மீது நாம் கொண்டுள்ள அன்பு, பற்று, பாசத்தை எடுத்துக்காட்டும் வகையிலும், கட்சி தொண்டர்கள் லட்சக்கணக்கில் திரண்டு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் அறிவையும், ஆற்றலையும், அர்ப்பணிப்பையும் தனது வாழ்வுக்கு வழிகாட்டியாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த, அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாகச் செல்வது, கட்சியின் வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் அமைந்திடும் என்பதால் அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையில் இருந்து டிசம்பர் 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஊர்வலமாகப் புறப்பட்டு ஜெயலலிதாவின் நினைவிடம் செல்வோம். நம் கண்ணீரை எல்லாம் பூக்களாக்கி ஜெயலலிதா என்னும் பூமகள், பொன்மகள் நீடுதுயில் கொள்ளும் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்.

கட்சியையும், ஆட்சியையும் கட்டிக்காத்திட ஜெயலலிதா பட்ட துயரங்களையும், தாங்கிய வேதனைகளையும், வடித்திட்ட கண்ணீரையும் பார்த்த நாம், ஜெயலலிதா வழியில் கட்சியையும், ஆட்சியையும் காத்திட அன்றைய தினத்தில் உறுதிமொழி ஏற்போம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story