தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் திருமாவளவன்


தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் திருமாவளவன்
x
தினத்தந்தி 22 April 2018 8:30 PM GMT (Updated: 22 April 2018 8:15 PM GMT)

தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும்’ என்று திருமாவளவன் கூறினார்.

கோவை, 

தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும்’ என்று திருமாவளவன் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேண்டுகோள் விடுத்து இருப்பது நியாயமானது. வரவேற்கத்தக்கது. தமிழக அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் கவர்னர் தன்னிச்சையாக செயல்பட தொடங்கியுள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் போது கூட தமிழக அரசை அவர் கலந்தாலோசிக்காமல் செயல்பட்டுள்ளார்.

கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறதா? அல்லது அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்ற சர்ச்சை கிளம்பும் அளவிற்கு கவர்னரின் செயல்பாடுகள் உள்ளன. கவர்னர் தொடர்ந்தால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடுகள் அதிகரிக்கும். எனவே கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பது சரியானது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பயணத்தின் போது கருப்புக் கொடி, ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக திராவிட கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திசை திருப்ப இது போன்ற செயல்களும், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்களால் மோசமான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

வைகோ பிரசார பயணத்தின் போது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜனதா கட்சியினரின் இது போன்ற திசை திருப்பும் முயற்சிக்கு பலியாகிவிடக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசும், கர்நாடக அரசும் எடுக்கின்றன. கர்நாடக தேர்தலுக்காக இந்த நிலைப்பாட்டை இவர்கள் எடுத்து தமிழகத்தை வஞ்சிக்கின்றனர்.

மேலும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா போன்றவர்கள் தமிழக காவல் துறை தங்களை எதுவும் செய்யாது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இருவரையும் தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இல்லை எனில் இவர்கள் தமிழக அரசுக்கு தலைவலியாகவும், நெருக்கடியாகவும் மாறுவார்கள்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Next Story