தாய்லாந்து நாட்டு பெண் புகாரில் சென்னையில் 2 தொழில் அதிபர்கள் கைது


தாய்லாந்து நாட்டு பெண் புகாரில் சென்னையில் 2 தொழில் அதிபர்கள் கைது
x
தினத்தந்தி 10 May 2018 10:00 PM GMT (Updated: 10 May 2018 8:34 PM GMT)

தாய்லாந்து நாட்டு பெண் கொடுத்த புகாரில் சென்னையில் 2 தொழில் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் நாருமோன் ஜெப்பை (வயது 28) என்பவர் இ-மெயில் மூலம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் துணிக்கடை நடத்தி வருகிறேன். சென்னை சூளையைச் சேர்ந்த தொழில் அதிபர் மனோஜ் ஜெயின்(42) என்பவர் பொம்மை வியாபாரம் செய்கிறார். வியாபார விஷயமாக இவர் தாய்லாந்து வரும் போது எனக்கு பழக்கமானார்.

என்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நெருக்கமாக பழகினார். இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 6 ஆண்டுகளாக அவரோடு நான் நடத்திய குடும்ப வாழ்க்கை மூலம் எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார்.

மேலும் அவரது நண்பர் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த இன்னொரு தொழில் அதிபர் விகாஸ்கோத்தாரி (40) தாய்லாந்து வந்திருந்த போது என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அப்போது மனோஜ் ஜெயினும் உடன் இருந்தார். விகாஸ் கோத்தாரி தவறாக நடக்க முயன்றதை மனோஜ் ஜெயின் தடுக்கவில்லை. அவர்கள் இருவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல் தடுப்பு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். தொழில் அதிபர்கள் மனோஜ் ஜெயின், விகாஸ்கோத்தாரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மேற்கண்ட தகவல்கள் நேற்று இரவு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் போது மனோஜ் ஜெயினும், விகாஸ் கோத்தாரியும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.

Next Story