மருத்துவ படிப்பில் சேருபவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்: அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு


மருத்துவ படிப்பில் சேருபவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்: அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 11 May 2018 9:00 PM GMT (Updated: 11 May 2018 8:40 PM GMT)

தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, மருத்துவ முதுகலை படிப்பில் சேரும் போது அவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

சென்னை, 

தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, மருத்துவ முதுகலை படிப்பில் சேரும் போது அவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், 2018-2019-ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவ முதுகலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது குறித்து கடந்த ஏப்ரல் 23-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், அரசு டாக்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், எந்த பகுதிகள் எல்லாம், தொலைதூர பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகள் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மருத்துவ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘புவியியல் அமைப்பின் அடிப்படையில், தொலைதூர பகுதி என்றும் எளிதில் அணுக முடியாத பகுதி என்றும் வகைப்படுத்தி அறிவிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதை செய்யாமல், குறைந்த எண்ணிக்கையில் டாக்டர்கள் உள்ள பகுதிகளை அறிவித்துள்ளது. எனவே, இந்த அரசாரணையை ரத்து செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி ஆகியோர், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று விசாரித்தனர். பின்னர், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story