மருத்துவ மாணவி செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் வங்கிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


மருத்துவ மாணவி செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் வங்கிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 May 2018 10:15 PM GMT (Updated: 14 May 2018 9:01 PM GMT)

கல்விக்கடன் கேட்டு மருத்துவ மாணவி செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி வங்கி நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கல்விக்கடன் கேட்டு மருத்துவ மாணவி செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி வங்கி நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மருத்துவ மாணவி ஆர்.சான்ஸ்கிரிட் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கல்விக்கடன்

பிளஸ்-2 மற்றும் நீட் தேர்வில் முறையாக தேர்ச்சி பெற்று செங்கல்பட்டு அருகேயுள்ள ஸ்ரீசத்ய சாய் மருத்துவ கல்லூரியில் கடந்த 2016-17-ம் ஆண்டில் முதலாம் ஆண்டு சேர்ந்தேன். கல்லூரி நிர்வாகம் கேட்ட கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்திவிட்டேன். பாக்கி தொகை மற்றும் அடுத்துவரும் கல்வி ஆண்டுகளுக்கான கட்டணத் தொகை சேர்த்து பள்ளிக்கரணை இந்தியன் வங்கியில் ரூ.63 லட்சத்து 90 ஆயிரத்திற்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தேன்.

பரிசீலிக்கவில்லை

கல்விக்கடன் கோரி நான் தாக்கல் செய்த மனுவை வங்கி நிர்வாகம் பரிசீலிக்கவில்லை முழு கட்டணத்தையும் செலுத்தாமல், வகுப்புக்குள் அனுமதிக்க முடியாது என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனால், போதிய வருகைப்பதிவேடு இல்லாததால் தேர்வு எழுத முடியவில்லை. எனவே எனக்கு உரிய கல்விக்கடன் வழங்க வங்கி நிர்வாகத்துக்கும், இரண்டாமாண்டில் சேர்த்துக்கொள்ளவும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

பெரிய தொகை

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது கல்லூரி நிர்வாகம் தரப்பில், கல்வி கட்டணத்தை முறையாக செலுத்துவோம் என்று அந்த மாணவியும், அவரது தந்தையும் உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால் கட்டணத்தை செலுத்தாமல், கல்விக்கடன் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறும் காரணத்தை ஏற்க முடியாது என்று வாதிடப்பட்டது.

வங்கி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அந்த மாணவி ஆன்லைன் மூலமாக கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். அந்த விண்ணப்பம் வேறு ஒரு கிளைக்கு சென்றுவிட்டது. மேலும், ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்விக்கடன் கேட்டால், அதற்கு உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால் மட்டுமே, கடன் வழங்க முடியும். அதேநேரம், இந்த மாணவி கேட்கும் பெரிய தொகை கல்விக்கடனாக வழங்க இயலாது’ என்று தெரிவித்து இருந்தது.

மீண்டும் முதல் ஆண்டு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘மாணவியின் கல்விக்கடன் தொடர்பான விண்ணப்பத்தை வங்கி நிர்வாகம் முறையாக பரிசீலித்து எவ்வளவு கல்விக்கடன் வழங்க முடியுமோ, அதை கடனாக வழங்க வேண்டும். ஒருவேளை கல்லூரிக்கு செலுத்த வேண்டிய முழு தொகையும் கடனாக கிடைக்க வில்லையென்றால், எஞ்சிய தொகையை மாணவி தன் சொந்தப்பணத்தில் இருந்து கல்லூரிக்கு செலுத்த வேண்டும். ஆனால், அவர் மீண்டும் முதலாமாண்டில் இருந்து தான் படிக்க வேண்டும். தொகையை செலுத்தும் வரை கல்லூரிக்கு செல்லலாம். ஆனால் தொகையை செலுத்திய பிறகே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்று கல்லூரி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story