பெண்களே, உஷார்..! விடுதி குளியல் அறை, படுக்கையறைகளில் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்த நபர்


பெண்களே, உஷார்..!  விடுதி குளியல் அறை, படுக்கையறைகளில்  ரகசிய கேமரா வைத்து படம் பிடித்த நபர்
x
தினத்தந்தி 4 Dec 2018 5:50 AM GMT (Updated: 4 Dec 2018 5:50 AM GMT)

சென்னையில் பெண்கள் தங்கும் விடுதியில் கழிவறை, படுக்கையறை உள்ளிட்ட பகுதிகளில் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

திருச்சியை சேர்ந்த சஞ்சீவி (45) என்பவர் சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் முதல் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அறைகளை வாடகைக்கு எடுத்து விடுதி நடத்தி வருகிறார். இவர் சமூக வலைதளங்களிலும் பெண்களுக்கான தங்கும் விடுதி குறித்து விளம்பரம் செய்துள்ளார்.

இதையடுத்து பிரபல ஐடி நிறுவனங்களில் பணிபுரியும்  10க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த விடுதியில் பேயிங் கெஸ்டாக தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளனர்.

இதனிடையே அறையில் சீரமைப்பு பணிகள் செய்வதாக கூறி வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி ஏதாவது செய்து வந்துள்ளார். இதையடுத்து அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு ரகசிய கேமராக்கள் ஏதாவது பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதனை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து தங்களது மொபைல் போனில்  உள்ள  செயலி மூலம் யாருக்கும் தெரியாமல் விடுதியின் கழிப்பறை, படுக்கையறை, துணிகள் மாட்டும் ஆங்கர் உள்ளிட்ட இடங்களில் கண்ணுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்கள் அனைவரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சஞ்சீவை கைது செய்தனர். விடுதி அறைகளில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், 16  மொபைல் போன்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற போலி ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சஞ்சீவி மீது 2011 முதல் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், பல பெயர்களில் போலி ஆணவனங்கள் வைத்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story