தமிழகத்துக்கு துரோகமிழைத்த மத்திய அரசைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழகத்துக்கு துரோகமிழைத்த மத்திய அரசைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகள்  சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2018 6:45 AM GMT (Updated: 4 Dec 2018 6:45 AM GMT)

மேகதாதுவில் அணைக் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சி,

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டவும், 400 மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆரம்ப கட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆய்வு நடத்தவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதை கண்டித்து, திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் திராவிட கழக  தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்பட  கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்  கலந்து கொண்டனர்.

போராடுவோம்! உரிமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்! 

என்று ஆர்ப்பாட்டத்தில்  மத்திய அரசை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன்  திமுக அணியை பலவீனப்படுத்த, பாஜக அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.  கர்நாடக தேர்தலில் வெற்றி பெற பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது என கூறினார்.

Next Story