அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் சேர்ப்பு


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் சேர்ப்பு
x
தினத்தந்தி 8 March 2019 9:54 AM GMT (Updated: 8 March 2019 9:54 AM GMT)

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை,

எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியில் இருப்பவர் கே.சி.பழனிசாமி. மூத்த அரசியல்வாதியான கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் பிரிந்து தனி அணியாக இயங்கியபோது அவருக்கு பெரிதும் உறுதுணையாக அந்த அணியில் இருந்தவர். அதன் செய்தித் தொடர்பாளராக இருந்தவர். பின்னர் அணிகள் இணைந்த பின்னர் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாமல் செய்தித் தொடர்பாளராக அப்படியே தொடர்ந்தார்.

அதிமுகவின் நிலையை ஊடகங்களில் சிறப்பாக பேசக்கூடியவர் கே.சி.பழனிசாமி. ஜெயா டிவி டிடிவி அணி பக்கம் இருப்பதால், அதிமுக சார்பில் அம்மா டிவி ஆரம்பிக்க முயற்சி எடுத்தபோது அதற்கு பொறுப்பு கே.சி.பழனிசாமிக்கு ஒதுக்கப்பட இருந்தது. பின்னர் அது அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி கைக்கு மாறியது.

அதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கே.சி.பழனிசாமி நிகழ்ச்சியில் பேசும் போது,  ''ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் பற்றிய கேள்விக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுகவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும்'' என்கிற தொனியில் பதிலளித்திருந்தார்.

மத்திய அரசுக்கு எதிராக கீழ் மட்டத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் கட்சியின் மேலிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் கே.சி.பழனிசாமியின் கருத்து அதிமுகவை சங்கடத்துக்குள்ளாக்கியது. 

இந்நிலையில்,  கட்சியின் கொள்கைகள், குறிக்கோளுக்கும் முரண்பாடாக செயல்பட்டதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக  கடந்த வருடம் 2018 மார்ச் 16-ம் தேதி அன்று அக்கட்சியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து சில காலம் விலகி இருந்தார். 

பாராளுமன்ற தேர்தல் வருவதையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளது அவரின் ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story