இன்றும் நாளையும் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை மையம் தகவல்


இன்றும் நாளையும் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 11 March 2019 8:51 AM GMT (Updated: 11 March 2019 8:51 AM GMT)

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக காணப்படும். கடந்த ஆண்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

இதனால் கோடை காலம் தொடங்கி விட்டாலே கோடையை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் படாத பாடுபடுவார்கள். இந்த ஆண்டு தற்போது கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே தயங்குகின்றனர். வேறு வழியில்லாத நிலையில் குடையை பிடித்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வருகின்றனர்.

வெளியில்தான் இந்த நிலைமை என்றால், வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால், இரவில் வெயிலின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல் காற்றாகவே வருகிறது. கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே இப்படி என்றால், அக்னி நட்சத்திர காலத்தில் இன்னும் வெயிலின் கொடுமை எப்படி இருக்குமோ? என பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். 

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பைவிட வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலை காணப்படும். சென்னை, வேலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை 2 முதல் 4 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story