மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு


மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு
x
தினத்தந்தி 14 March 2019 12:15 AM GMT (Updated: 13 March 2019 10:52 PM GMT)

நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார்.

நாகர்கோவில், 

தி.மு.க. கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார்.

ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது:-

தமிழக மண்ணின் சாதனையாளர்களான காமராஜர், நேசமணியை நினைத்து பேச்சை தொடங்குகிறேன். நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்கிறேன். தமிழ்நாட்டின் முதல்- அமைச்சராக ஸ்டாலின் விரைவில் வரப் போகிறார். அன்புக்குரிய ஸ்டாலின் பேசும்போது கருணாநிதி வாழ்கிறார் என்று சொன் னார். நான் பலமுறை கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பை பெற்றவன். தமிழின் உணர்வில் அவர் இரண்டற கலந்து இருக்கிறார். அதேபோல் காமராஜர் தமிழ் மண்ணோடும், மக்களோடும் வாழ்கிறார்.

மோடி அரசின் கைப்பாவை

பிரதமர் மோடி, தமிழ் மொழிக்கும், கலாசாரத்துக் கும் எதிராக நடந்து கொண்டு இருக்கிறார். அதனை மீட்டெடுக்கவே, கூட்டணி அமைத்து உள்ளோம். தமிழகத்தில் நடக்கிற இந்த ஆட்சி, மோடி அரசின் கைப்பாவையாக நடந்து கொண்டு இருக்கிறது.

கடந்த காலத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கட்சிகள் இடையே போட்டி இருந்தது. 2 கட்சிகளிலும் மகத்தான தலைவர்கள் இருந்தனர். ஆனால் இப்போது தமிழகத்தில் ஆள்பவர்களை, மத்தியில் இருந்து கொல்லைப்புற வழியாக இயக்கி, ஆட்சி நடப்பதை பார்த்து வருகிறோம். மத்தியில், தமிழகத்தின் கை ஓங்கி இருந்த காலம் உண்டு. தமிழர்களின் உணர்வால் பின்னப்பட்ட ஆட்சி நடந்தது. ஆனால் மோடி, இப்போது இந்தியாவின் இறையாண்மையை நிர்மூலமாக்கிக் கொண்டு இருக்கிறார்.

மாநிலங்களை அடக்கி ஆள முயற்சி

அவர் மத்தியில் இருந்து கொண்டு மாநிலங்களை அடக்கி ஆள முயற்சிக்கிறார். மோடிக்கு சொல்ல விரும்புகிறேன். அவர் எங்கு எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தமிழக மக்கள், ஒரு போதும் இதனை அங்கீகரிக்க மாட்டார்கள்.

பிரதமர் மோடி பொய்யை தவிர வேறு எதுவும் சொல்வது இல்லை. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் அளிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என்றார். ஆனால் நாடு தற்போது வேலையில்லா திண்டாட்டத்தை சந்தித்து வருகிறது.

விவசாயிகள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடுவதை பார்த்து கண் கலங்கி இருக்கிறேன். பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்று சொன்னோம். அதன்படி தள்ளுபடி செய்து உள்ளோம்.

வர்த்தக நண்பர்களுக்கான ஆட்சி

மோடி அவருடைய தொழில் வர்த்தக நண்பர்களுக்காக ஆட்சி நடத்துகிறார். விவசாயிகள் காப்பீட்டு திட்டம், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் மோடி திட்டங்கள் அனைத்தும் பணக்காரர்களை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்டவை ஆகும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, எச்.ஏ.எல். நிறுவனம் மூலம் ஒரு விமானத்தை ரூ.526 கோடிக்கு வாங்க இருந்தோம். ஆனால் நாம், ஆட்சியை விட்டு விலகிய போது, அந்த திட்டத்தை மோடி அனில் அம்பானிக்கு வழங்கி விட்டார். ரூ.1,526 கோடிக்கு விமானம் வாங்கப்படுகிறது. மோடியால் மக்கள் வரிப் பணம் வீணானது. மத்திய பாதுகாப்பு துறை சார்பில் எடுக்க வேண்டிய முடிவை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து செயல்படுத்தி இருக்கிறார்.

சிறைக்கு செல்வார்

மோடியின் நிர்ப்பந்தத்தால் (ரபேல் போர் விமானங்கள் வாங்கும் விவகாரம்) பாதுகாப்பு துறையின் 30 ஆயிரம் கோடி வரிப் பணம், அனில் அம்பானிக்கு கொடுக்கப் பட்டு உள்ளது. ரபேல் போர் விமான ஊழலில் உண்மை எப்போதும் வெல்லும். அந்த உண்மை மோடியை சிறையில் தள்ளும்.

கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வேலையில்லா திண்டாட்டத்தை போக்க முயற்சி எடுப்போம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரியால் தொழில்கள் நலிந்து விட்டன. நாம் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஜி.எஸ்.டி. வரி அமைப்பை மாற்றி அமைப்போம். ஒரே வரி, எளிமையான வரி, மக்களுக்கான வரி. விவசாயிகள், தொழிலாளிகள், நிறுவனங்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இப்போது கையில் வைத்திருக்கிற செல்போனை திறந்து பாருங்கள். சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று எழுதப்பட்டு இருக்கும். சட்டையின் பின்னால் பாருங்கள், அதிலும் சீனா என்று எழுதப்பட்டு இருக்கும்.

பசுமை புரட்சி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஸ்டாலின் ஆட்சி வரும் போது, எந்த பொருளாக இருந்தாலும் சரி, அது தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டது என்று எழுதப்பட்டு இருக்கும். நம்முடைய நாடு, சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். தமிழ்நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் உண்மையாக உற்பத்தி செய்கிற இளைஞர்களுக்கு வங்கி மூலம் கடன் வழங்கி அவர்களை முன்னேற வைப்போம்.

மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் கொண்டு வருவோம். மீண்டும் இந்தியாவில் பசுமை புரட்சியை கொண்டு வருவோம். தமிழக மக்களுக்காக இன்னும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவோம். நாட்டில் வாழ்கிற எல்லா மக்களுக்கும் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு, வருமானம் வருகிற திட்டத்தை அளிக்க உள்ளோம். குறைந்தபட்ச வருமான திட்டத்தை உருவாக்குவோம்.

மீனவர் நலத்துறை அமைச்சகம்

கஜா புயலால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து விட்டனர். ஏராளமானோருக்கு மத்திய அரசு நிவாரணம் தரவில்லை. ஆனால், 15 பேருக்கு 3½ லட்சம் கோடி ரூபாயை மோடி கொடுத்து விட்டார். புயல் பாதிப்பின் காரணமாக பல மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மீனவர் நலத்துறை அமைச்சகம் அமைக்கப்படும்.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு நல்லாட்சி அமையும். மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவோம். மேலும் மத்திய அரசு துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

இந்த மேடையிலே அருமையான தலைவர்கள், உங்களின் உரிமைகளை காக்கிற தலைவர்களாக இருக்கிறார்கள். எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், ஒரு கருத்தில் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒரு மொழி, ஒரு மதம் என்று, மோடிக்கு ஒரு கொள்கை இருக்கிறது. நாங்கள் அதில் இருந்து மாறுபட்டு இருக்கிறோம். ஒரு மொழி, ஒரு மதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதனை தமிழக மக்கள் மீதும் திணிக்க விட மாட்டோம்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

Next Story