இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் ஆபாச படம் அனுப்பிய பட்டதாரி கைது


இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’பில் ஆபாச படம் அனுப்பிய பட்டதாரி கைது
x
தினத்தந்தி 14 March 2019 9:15 PM GMT (Updated: 14 March 2019 8:56 PM GMT)

தூத்துக்குடியில் திருமணமான இளம்பெண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்‘பில் ஆபாச படம் அனுப்பிய பட்டதாரி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், ‘ஒரு செல்போன் எண்ணில் இருந்து மர்ம நபர் ஒருவர் எனது செல்போன் எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவிட்டார்.

பி.ஏ. பட்டதாரி

அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச படங்கள் வரும் செல்போன் எண் யாருடையது? என்பதை டிராக் செய்தனர். அப்போது அது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மாரிதுரை (வயது 27) என்ற பி.ஏ. பட்டதாரியின் எண் என்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது

அப்போது அவர், தனது செல்போன் எண்ணில் அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியதும், பின்னர் மற்றொரு எண்ணை பயன்படுத்தி ‘வாட்ஸ்-அப்‘ மூலம் அவருக்கு ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பெண் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரிதுரையை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story