அ.தி.மு.க. கூட்டணி கட்சி தொகுதி பங்கீடு பட்டியல் நாளை வெளியாகிறது


அ.தி.மு.க. கூட்டணி கட்சி தொகுதி பங்கீடு பட்டியல் நாளை வெளியாகிறது
x
தினத்தந்தி 16 March 2019 5:35 PM GMT (Updated: 16 March 2019 5:35 PM GMT)

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பட்டியல் நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. #AIADMK

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க.வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா.வுக்கு 1, புதிய தமிழகம் கட்சிக்கு 1, புதிய நீதிக்கட்சிக்கு 1, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன.

பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகள் உறுதியாகி விட்டன. 5-வது தொகுதி எது என்பதில்தான் இழுபறி நிலை இருந்தது. வடசென்னை, திருச்சி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் இருந்து ஒன்றை பா.ஜ.க. கேட்டு வந்தது.

ஆனால், அ.தி.மு.க. தலைமை பா.ஜ.க.வின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. ராமநாதபுரம் தொகுதியை தருவதாக வாக்குறுதி அளித்தது. இதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது, ராமநாதபுரம் தொகுதியை பெற பா.ஜ.க. சம்மதம் தெரிவித்துவிட்டது. இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் கிரெளன் பிளாசாவில் நாளை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் காலை 9.45 மணிக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story