பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழக போலீஸ்துறையில் தனிப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் செயல்படும்


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழக போலீஸ்துறையில் தனிப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் செயல்படும்
x
தினத்தந்தி 16 March 2019 10:30 PM GMT (Updated: 16 March 2019 8:49 PM GMT)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழக போலீஸ்துறையில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தலைதூக்கி உள்ளது. குழந்தைகளிடம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் நபர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்காக மகளிர் போலீஸ்நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

பாலியல் வன்முறை சம்பவங்கள்

அருப்புக்கோட்டையில் மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவங்கள் பூதாகர பிரச்சினையாக வெடித்துள்ளது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்காக போலீஸ்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தனி பிரிவு

இந்தநிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக தமிழக போலீஸ்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த தமிழக அரசு இசைவு தெரிவித்து அரசாணை வெளியிட்டது.

அதனடிப்படையில் போலீஸ் டி.ஜி.பி. மேற்பார்வையில் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் 3 போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் அடங்கிய பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி., மத்திய குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, விபசார தடுப்புப்பிரிவு என்று போலீஸ்துறையில் ஒவ்வொரு குற்றங்களையும் விசாரிக்க தனி பிரிவு இருப்பது போன்று இந்த பிரிவும் செயல்பட உள்ளது.

விரைவில் அறிவிப்பு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் இந்த பிரிவில் விரைவில் போலீஸ் அதிகாரிகளும், புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு எண்களும் வெளியிடப்பட உள்ளன.

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தை தலைமையிடமாக கொண்டு மாவட்டந்தோறும் இந்த பிரிவு செயல்படும் என்று தெரிய வந்துள்ளது. இதற்காக முறைப்படி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story