கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு -முதல்வர் பழனிசாமி


கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு  -முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 20 March 2019 8:21 AM GMT (Updated: 20 March 2019 8:21 AM GMT)

கருத்துக் கணிப்புக்கள் என்பது கருத்துத் திணிப்பு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019

சேலம்

சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதி.மு.க. கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை முதலமைச்சர் எடப்பாடி அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது  அவர் கூறியதாவது:-

வலிமையான தலைமையின் கீழ் பாரதம் இருக்க வேண்டும். அந்த பாதுகாப்பு, வலிமையை கொடுக்க கூடிய ஒரே கட்சி பாரதிய ஜனதா மட்டும்தான். நாடு பாதுகாப்பாக இருக்க வலிமை பொருந்திய மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும்.

மக்கள் நலனை தலைமையானதாகக் கொண்டு கூட்டணி அமைத்து  இருக்கிறோம். மத்தியில் ஒரு ஆட்சி, மாநிலத்தில் ஒரு ஆட்சி என்று இருந்தால் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது. அதிகாரத்திற்காக எதை வேண்டும் என்றாலும் செய்யக் கூடிய ஒரே கட்சி திமுக மட்டும் தான் என கூறினார்.

பின்னர் சேலத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி, ஆனால் திமுக கூட்டணி சுயநலமானது. இப்போது நடைபெறுகின்ற தேர்தல் இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடியது.

வெளியாகி வருவது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. அதிமுக தேர்தல் பணிகளில் தொய்வு ஏதும் இல்லை. அமமுக பிறக்காத குழந்தைக்குப் பெயர்வைத்த அமைப்புதானே தவிர பதிவு செய்து சின்னம் பெற்ற கட்சியல்ல எனவும் விமர்சித்தார்.

Next Story