தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனையில், இதுவரை 13.90 கோடி ரூபாய் பணம் பறிமுதல்


தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை சோதனையில், இதுவரை 13.90 கோடி ரூபாய் பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 March 2019 8:10 AM GMT (Updated: 21 March 2019 8:10 AM GMT)

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், இதுவரை 13.90 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #LokSabhaElections2019

சென்னை,

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களவைத் தேர்தலுக்காக இதுவரை  29 ஆண்கள், 1 பெண் என 30 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலுக்கு 3 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு மட்டும் தலா 3 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையால் இதுவரை 13.90 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

உரிமம் பெற்றுள்ள 21999 துப்பாக்கிகளில் 18 ஆயிரம் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 32 துப்பாக்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

79 பேர் மக்களவை தேர்தல் செலவின பார்வையாளர்களாக  நியமிக்கப்பட்டுள்ளனர் . மதுமகாஜன் சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்  ஜெயகுமார் மீது கொடுத்த புகார் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். சூலூர் எம்.எல்.ஏ மறைவு குறித்து சட்டப்பேரவை செயலாளர் முறையாக அறிவித்த பின், தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்போம். குற்ற வழக்கு குறித்து வேட்பாளர்கள் விண்ணப்பம் மூலம் தேர்தல் அதிகாரியிடம் தெரியப்படுத்தவும், செய்தித் தாள்களில் விளம்பரப்படுத்தவும் வேண்டும், இவ்வாறு அவர்  கூறினார்.

Next Story