கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி - பொன்.ராதாகிருஷ்ணன்


கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி - பொன்.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 21 March 2019 5:02 PM GMT (Updated: 21 March 2019 5:18 PM GMT)

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இக்கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவையே அந்த தொகுதிகள். அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை பா.ஜனதா வேட்பாளர் தேர்வு குழு மேற்கொண்டது.

இந்த பட்டியல்  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

184 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை பா.ஜனதா மூத்த தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.

அதன்படி, தூத்துக்குடி தொகுதியில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார்.

கோவை தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிறுத்தப்பட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். 

மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு தந்த பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனி தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும் என்றார்.

Next Story