“நான் தற்போது தி.மு.க.வில் இருக்கிறேன்” நாஞ்சில் சம்பத் பேட்டி


“நான் தற்போது தி.மு.க.வில் இருக்கிறேன்” நாஞ்சில் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 24 March 2019 7:42 PM GMT (Updated: 24 March 2019 7:42 PM GMT)

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, நாஞ்சில் சம்பத் நேற்று சந்தித்து பேசினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, நாஞ்சில் சம்பத் நேற்று சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களையும், 18 தொகுதி இடைத்தேர்தல்களில் களம் காணும் வேட்பாளர்களையும் ஆதரித்து 26-ந்தேதி (நாளை) முதல் ஏப்ரல் 16-ந்தேதி வரை நான் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

அதற்காக தி.மு.க. தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரின் வாழ்த்துகளை பெறுவதற்காக வந்தேன். ஏற்கனவே தி.மு.க. கூட்டங்களில் 4 முறை நான் பேசியிருக்கிறேன். தீர்ந்து போகாத திராவிட இயக்கத்தின் கொள்கைகளை வென்றெடுக்கிற மகத்தான தலைமை, மு.க.ஸ்டாலினின் தலைமை ஆகும். நான் தி.மு.க.வில் தான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ம.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்த நாஞ்சில் சம்பத், திடீரென்று அ.தி.மு.க.வுக்கு தாவினார். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வின் செய்தி தொடர்பாளராக மாறினார். அங்கிருந்தும் வெளியேறிய அவர் சமீபகாலமாக தி.மு.க. நடத்தும் கூட்டங்களில் பங்கெடுத்து வந்தார். இந்தநிலையில் நான் தி.மு.க.வில் இருக்கிறேன் என்று அவர் நேற்று கூறியிருக்கிறார். இதன்மூலம் நாஞ்சில் சம்பத்தின் அடுத்த அரசியல் நகர்வு தொடங்கிவிட்டது. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Next Story