வாக்குச்சாவடியை கைப்பற்றுவதாக சர்ச்சை பேச்சு அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு


வாக்குச்சாவடியை கைப்பற்றுவதாக சர்ச்சை பேச்சு அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 April 2019 6:45 PM GMT (Updated: 6 April 2019 5:27 PM GMT)

வாக்குச்சாவடியை கைப்பற்றுவதாக சர்ச்சையாக பேசியது தொடர்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருப்போரூர், 

வாக்குச்சாவடியை கைப்பற்றுவதாக சர்ச்சையாக பேசியது தொடர்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சர்ச்சை பேச்சு 

காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து கடந்த 4–ந்தேதி திருப்போரூரில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் இருக்கப்போவது நாம் தான். சொல்வது புரிகிறதா?. இதற்குமேல் தெளிவாக உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. எதிரணிக்கு இது தெரியாது. நாம ஜெயிச்சிட்டோம்’ என்று தெரிவித்தார்.

வாக்குச்சாவடியை கைப்பற்றுவது குறித்த அன்புமணி ராமதாசின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு 


இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்ய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பொன்னையா உத்தரவிட்டார். அதன்பேரில் திருப்போரூர் தேர்தல் அதிகாரி ராஜூவிடம் அன்புமணி ராமதாஸ் மீது புகார் அளிக்க பரிந்துரை செய்தனர், அதனைத்தொடர்ந்து திருப்போரூர் வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி ஆகிய இருவரும் திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன் புகாரை ஏற்றுக்கொண்டு, அன்புமணி ராமதாஸ் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளார்.

Next Story