காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.; முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம்


காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.; முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம்
x
தினத்தந்தி 7 April 2019 5:25 AM GMT (Updated: 7 April 2019 5:25 AM GMT)

காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி தி.மு.க. என முதல் அமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

வேடசந்தூர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொது கூட்டங்களில் பேசியும் மற்றும் பிரசாரங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

நாடாளுமன்ற கரூர் மக்களவை தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  

அவர் வேடசந்தூர் பகுதியில் கூட்டத்தினரின் முன் பேசும்பொழுது, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்பட்ட பொய் அறிக்கை.  கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யும் கட்சி தி.மு.க., மத்தியில் கூட்டணியில் இருந்தும் தமிழகத்திற்கு தி.மு.க. எந்த நல்லதும் செய்யவில்லை.

தி.மு.க. ஏழைகளுக்கு கொடுப்பவற்றை தடுக்கும் கட்சி.  தி.மு.க. நிர்வாகிகள் ஒழுங்காக இருந்து விட்டால் பெண்கள் பாதுகாப்புடன் இருப்பர்.  விவசாயிகளுக்காக 23 நாட்கள் நாடாளுமன்றம் முடக்கம் செய்யப்பட்டது.

முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.  தேர்தல் வரும்போது தான் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் குறித்து ஞாபகம் வருகிறது.  தி.மு.க.வுக்கு வீட்டு மக்களை பற்றியே கவலை என கூறினார்.

Next Story