அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை


அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 April 2019 7:39 PM GMT (Updated: 10 April 2019 7:39 PM GMT)

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, 

பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று அங்கீகார ஆணையினை கேட்டு பெற வேண்டும்.

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் விவரத்தினை பத்திரிகைகளில் வெளியிட்டு, அந்த பள்ளியின் முகப்பில் ‘அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளி’ என்ற தகவலை ஒட்ட வேண்டும்.

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுதொடர்பான அறிக்கையினை அடுத்த மாதம்(மே) 29-ந்தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறி, அதனால் பள்ளிக்குழந்தைகளில் பாதுகாப்புக்கோ, கல்வி நலனுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட வட்டார, மாவட்ட மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களையே சாரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.

Next Story