4 தொகுதி இடைத்தேர்தல்: கட்சி தலைவர்கள் பிரசாரத்துக்கு போக்குவரத்து சலுகை தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு


4 தொகுதி இடைத்தேர்தல்: கட்சி தலைவர்கள் பிரசாரத்துக்கு போக்குவரத்து சலுகை தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 12 April 2019 8:25 PM GMT (Updated: 12 April 2019 8:25 PM GMT)

தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வதற்கு போக்குவரத்து செலவில் சலுகை அளிக்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 77-ல் செய்யப்பட்ட வழிவகைகளின்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள், அந்த கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் செலவுக்கணக்கில் சேராது.

இந்த சலுகையைப் பெற, பிரசாரம் செய்யும் தலைவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், அங்கீகாரமற்ற கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அல்லது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவேண்டும்.

அறிவிக்கை நாள்

தேர்தல் செலவினத்தில் இருந்து விலக்கு பெறவேண்டிய இந்த தலைவர்கள் பட்டியலை, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டுள்ள நாளில் இருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் அறிவிக்கை 22-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

செலவுத்தொகையில் இருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பெயர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அல்லது தலைமை தேர்தல் அதிகாரிக்கு 29-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.

இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரசாரம் செய்தால் அதில் விலக்கு கோர இயலாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story