பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 19 April 2019 10:15 PM GMT (Updated: 19 April 2019 9:29 PM GMT)

வளமையும், செழுமையும் நிலைக்க பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் நேற்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை,

மதுரை சித்திரைத் திருவிழா கடந்த 8-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளத்தில் உள்ள பெருமாள்கோவிலில் 15-ந் தேதி ஆரம்பமானது. மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 17-ந்தேதி விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

மதுரைக்கு வடக்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையில் அழகர், கள்ளழகர் ஆகிய திருப்பெயர்களைகொண்ட சுந்தரராஜப் பெருமாள் குடிகொண்டிருக்கிறார். அங்கிருந்து அவர் கள்ளழகர் வேடம் தரித்து, மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் வழங்குவதற்காகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளவும், தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வருவதாக புராணங்கள் கூறுகின்றன.

சித்திரை பெருவிழாவையொட்டி இந்த ஆண்டு அழகர்கோவிலில் இருந்து அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 17-ந் தேதி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். அங்கிருந்து, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் ஆகிய இடங்களை கடந்து, நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடிக்கு வந்தார்.

அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது. அழகர் வேடம் தரித்த ஏராளமான பக்தர்கள் அழகரை எதிர் கொண்டு வர்ணனை பாடல்களை பாடினார்கள். தோல் பைகளில் அடைக்கப்பட்டிருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிப்பாடி வரவேற்றார்கள்.

அதைத்தொடர்ந்து, புதூர், ரேஸ்கோர்ஸ் காலனி, ரிசர்வ் லைன், தல்லாகுளம் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு கள்ளழகர் காட்சி அளித்தார்.

தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு கள்ளழகர் வந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகருக்கு சூட்டப்பட்டது.

நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் அழகர் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. அதிகாலை 3 மணி அளவில் தங்கக்குதிரையில் அமர்ந்தபடி, ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு கள்ளழகர் புறப்பட்டார்.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்ததால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கள்ளழகரை வரவேற்க நேற்று முன்தினம் இரவே மதுரை நகரெங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தல்லாகுளத்தில் இருந்து வழிநெடுகிலும் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழ்வார்புரம் பகுதிக்கு கள்ளழகர் வந்தார்.

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதை காண ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டிருந்தனர். வைகை ஆற்றின் கரையோரங்களிலும், ஆற்றுப் பாலத்திலும் காணும் இடம் எல்லாம் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தன.

நேற்று காலை 5.50 மணி அளவில் அதிர்வேட்டுகள் முழங்கின. வளமையும், செழுமையும் நிலைக்க தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் ‘பச்சைப்பட்டு’ உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் “கோவிந்தா, கோவிந்தா...” என்று எழுப்பிய பக்தி கோஷம் விண்ணை முட்டியது. சர்க்கரை நிரப்பிய செம்புகளில் தீபம் ஏற்றி அழகருக்கு தீபாராதனையாக காட்டி பக்தர்கள் வழிபட்டார்கள்.

ஏற்கனவே, வீரராகவப் பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் இருந்தார். அவர், தங்கக்குதிரையில் வந்த கள்ளழரை வரவேற்று 3 முறை அவரை வலம் வந்தார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய அந்த பக்திப் பரவசமான காட்சியை காண 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபம் வந்தார்.

மதியம் 12 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து அழகரை வழிபட்டனர். அங்கு அவர் மீது கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரியும் நடைபெற்றது. இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார்.

இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு வீரராகவப் பெருமாள் கோவிலில் கள்ளழகர் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் உலா வருகிறார். காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில் 11 மணிக்கு தேனூர் மண்டபத்தை அடைகிறார்.

மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமார் கோவிலுக்கு கள்ளழகர் வருகிறார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடக்கிறது.

இரவு ராமராயர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு 11 மணிக்கு திருமஞ்சனமாகி விடிய விடிய தசாவதார காட்சி நடக்கிறது. முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகனாவதாரம் உள்பட பல்வேறு அவதாரங்களில் அழகர் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் வீதி உலா வர உள்ளார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி மறுநாள் (22-ந்தேதி) அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார்.

அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். பின்னர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு இருப்பிடம் அடைகிறார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தையொட்டி மதுரை நகரங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மகிமை வாய்ந்த பச்சைப்பட்டு

* கள்ளழகர் நேற்று காலை பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதனால் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும், காணும் இடம் எல்லாம் பச்சை பசேல் என்று இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* கள்ளழகரை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர். அவர்கள் கள்ளழகர் இறங்கும் பகுதி மற்றும் அவர் செல்லும் பகுதிகளில் சாலையோரம் தாங்கள் வந்த வாகனங்களை நிறுத்தி சமையல் செய்து சாப்பிட்டு அங்கேயே தங்கினார்கள்.

* அழகர் வேடம் தரித்த ஏராளமான பக்தர்கள் கள்ளழகரை எதிர் கொண்டு, வர்ணனை பாடல்களை பாடி, உற்சாகமாக ஆடி வரவேற்றனர். தோல் பைகளில் அடைக்கப்பட்டிருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தும் வரவேற்றார்கள்.

கள்ளழகர் நேற்று வைகையில் இறங்கியதை பார்க்க மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அதிகமான பக்தர்கள் கூடினார்கள். மேலும் அவர்கள் முந்திக் கொண்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடத்திற்கும், அருகில் உள்ள ஏ.வி.மேம்பாலத்திற்கும் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதையும் மீறி பக்தர்கள் கூட்டம் அந்த பகுதியில் முன்னேறி செல்ல முயன்றதால் போலீசார் அவர்கள் மீது லேசாக தடியடி நடத்தினார்கள். இதில் பெண்கள் பயந்து போய் அங்கிருந்து ஓடும் நிலை ஏற்பட்டது. சிலர் கூட்ட நெரிசலில் சிக்கினார்கள். பின்னர் போலீசார் அந்த பகுதியில் கூட்டத்தை சரிசெய்து ஒழுங்குபடுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story