தூத்துக்குடி தொகுதியில் வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு


தூத்துக்குடி தொகுதியில் வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 April 2019 10:30 PM GMT (Updated: 19 April 2019 9:33 PM GMT)

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க., அ.ம.மு.க. வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா செய்ததாக பொதுமக்களே தெரிவித்தனர் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

ஆலந்தூர்,

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் நிச்சயமாக தாமரை மலர்ந்தே தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தேர்தல் வழிமுறைகள், ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்ட தேர்தல் ஆணையம், பணப்பட்டுவாடாவையும் தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும்.

தூத்துக்குடி தொகுதியில் வெளிப்படையாகவே பணப்பட்டுவாடா நடந்ததாக மக்களே தெரிவித்தனர். வாக்காளர்களுக்கு நாங்கள் பணம் தரவில்லை. ஆனால் தி.மு.க., அ.ம.மு.க. கட்சியினர் பணம் கொடுத்ததாக மக்கள் தெரிவித்தனர்.

நிறைய பணம் வைத்து உள்ளவர்கள்கூட மக்களுக்கு ரூ.200, ரூ.300 என குறைவாக கொடுத்ததுதான் கவலையாக உள்ளது. கொடுத்ததை கொஞ்சம் அதிகமாக கொடுத்து இருந்தால் மக்களாவது சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். இது தொடரலாம்.

அரசியலில் எல்லா தலைவர்களையும் மதிக்கவேண்டும். எல்லா தலைவர்களுக்கும் ஒரு கருத்து இருக்கும். எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை தெரிவிக்கலாம்.

ஆனால் மற்ற தலைவர்களின் கருத்துகள் தொலைக்காட்சியில் வரும்போது அதை உடைக்கவேண்டிய நிலையில் தமிழக அரசியல் இல்லை. மற்ற தலைவர்களைவிட தன்னை உயர்வாக காட்டிக்கொள்ள கமல்ஹாசன் அப்படி செய்து இருந்தால் தவறு. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story