நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை பாதுகாக்க தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்


நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை பாதுகாக்க தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 6 May 2019 7:06 AM GMT (Updated: 6 May 2019 8:13 AM GMT)

நீர் நிலைகள் மற்றும் நீர் வழிகளை பாதுகாப்பதற்கு சிறப்பு பிரிவை அமைப்பது குறித்து தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

சென்னை

மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தலைமை செயலர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீர் நிலைகள், நீர் வழித் தடங்கள், கழிவு நீர் கால்வாய்களை 6 மாதங்களுக்குள் அளவீடு செய்யவும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மாதம் ஒரு முறை, தலைமை செயலர் ஆய்வு செய்ய வேண்டும், தமிழகம் முழுவதும் போலீஸ் உதவியுடன் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீட்க வேண்டும். போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து முறையான உதவி வரவில்லை என்றால், ராணுவத்தினரின் உதவியை நாடலாம். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை துவங்குவதற்கு முன், மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். நீர் நிலைகள், தண்ணீர் பாதைகள், ஆறுகள், கால்வாய், குளங்களில் எந்த ஆக்கிரமிப்பும் கட்டுமானமும் இல்லாததை சிறப்பு பிரிவு உறுதி செய்ய வேண்டும். கடமை தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமை அரசுக்கு உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அரசுக்கு சிறப்பு பிரிவு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை பாதுகாக்க சிறப்பு பிரிவு அமைப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வருவாய் துறை, குடிநீர் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்பு குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story