தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தொடர்ந்து வலியுறுத்துவோம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தொடர்ந்து வலியுறுத்துவோம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 11 May 2019 12:00 AM GMT (Updated: 11 May 2019 12:01 AM GMT)

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கேட்டு தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப் பாடு. அதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த தீர்மானம் மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.


சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் தமிழக கவர்னர் முடிவு எடுக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்று தொடர்ந்து கவர்னரை வலியுறுத்தி வருகிறோம்.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் சுயாட்சி அமைப்பு. அவர்களுக்கு அதிக அதிகாரம் இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் அதிகாரத்துக்கு உட்பட்டுதான் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்து செயல்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story