‘குட்கா’ ஊழல் வழக்கு: தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லாவிடம் சி.பி.ஐ. விசாரணை


‘குட்கா’ ஊழல் வழக்கு: தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லாவிடம் சி.பி.ஐ. விசாரணை
x
தினத்தந்தி 11 May 2019 11:45 PM GMT (Updated: 11 May 2019 8:57 PM GMT)

‘குட்கா’ ஊழல் வழக்கு தொடர்பாக தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சென்னை,

தமிழகத்தில் குட்கா, மான் மசாலா போன்ற புகையிலை பொருட் களை விற்பனை செய்வதற்கு தடை உள்ளது. இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றத்தில் இயங்கி வந்த ‘குட்கா’ ஆலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாக ‘குட்கா’, ‘மான் மசாலா’ வை விற்பனை செய்ய கோடிக்கணக்கில் லஞ்ச பணம் மாறியது தொடர்பான ‘டைரி’ சிக்கியது.

அதில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட போலீஸ் உயர்அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை, கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பெயர் இடம் பெற்றதாக பரபரப்பு தகவல் வெளியானது.

வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ‘குட்கா’ ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பின்னர் சம்மன் அனுப்பப்பட்டு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒவ்வொருவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

குட்கா ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகையை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்வதற்காக விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். குட்கா ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் காலக்கட்டத்தில், சென்னை போலீஸ் கமிஷனராக தற்போதைய தேர்தல் டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா சிறிது நாட்கள் பணியாற்றினார்.

எனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ. சார்பில் அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர், தேர்தல் பணியை காரணம் காட்டி அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று கூறியதால், அவர் கடந்த வாரம் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை ஆஜராகி இருக்கும் தகவல் தற்போது தெரிய வந்தது.

அப்போது அவர், கடந்த 2016-ம் சட்டமன்ற தேர்தலில் போது, தேர்தல் நடத்தை விதிகள் படி கமிஷனராக மாற்றப்பட்டேன். சிறிது நாட்கள் மட்டுமே நான் கமிஷனராக பணியாற்றியதால், குட்கா ஊழல் விவகாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று கூறியதாக தெரிகிறது.

Next Story