அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை


அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2019 6:43 AM GMT (Updated: 14 May 2019 9:22 AM GMT)

அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  நேற்று முன் தினம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.  கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

கமல்ஹாசனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். தீவிரவாதிகளுக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என எந்த மதமும் கிடையாது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த  உறுதிமொழியை ராஜேந்திர பாலாஜி மீறியுள்ளார். ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story