பா.ஜனதாவுடன் பேசி வருகிறேனா? தமிழிசை சவுந்தரராஜன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் மு.க.ஸ்டாலின் சவால்


பா.ஜனதாவுடன் பேசி வருகிறேனா? தமிழிசை சவுந்தரராஜன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் மு.க.ஸ்டாலின் சவால்
x
தினத்தந்தி 14 May 2019 11:15 PM GMT (Updated: 14 May 2019 7:28 PM GMT)

மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் கூட்டணி பேசி வருவதாக பிரதமர் மோடியோ, தமிழிசை சவுந்தரராஜனோ நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.

சென்னை, 

மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் கூட்டணி பேசி வருவதாக பிரதமர் மோடியோ, தமிழிசை சவுந்தரராஜனோ நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பச்சை பொய்

பிரதமர் நரேந்திர மோடியுடன் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார், பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்துதான் எங்களுடன் பேசி வருகிறார் என்று பச்சை பொய் நிறைந்த ஒரு பேட்டியை பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தோல்வியின் விளிம்புக்கு சென்று விட்ட பா.ஜனதாவுக்கு இதுபோன்று குழப்பங்களை விதைப்பது கைதேர்ந்த விளையாட்டு. ஆனால் பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜன் இப்படியொரு பொய் பேட்டியை அளிப்பதற்காக தன்னை இந்த அளவுக்கு தரம் தாழ்த்திக்கொண்டு விட்டாரே என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தி.மு.க. தான். அதே நேரத்தில் 5 ஆண்டு காலத்தில் மக்களுக்கு சொல்லொண்ணா துயரத்தை அளித்த நரேந்திர மோடியை “பாசிஸ்ட்”, “சேடிஸ்ட்”, “சர்வாதிகாரி” என்று முதன்முதலில் விமர்சித்தது மட்டுமின்றி, மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வரவே கூடாது என்று சென்னையில் மட்டுமல்ல கொல்கத்தாவிலும், டெல்லியிலும் பிரசாரம் செய்தவனும் அடியேன் தான்.

பகடைக்காய்

தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அதே பிரசாரத்தை செய்திருக்கிறேன். நடைபெற இருக்கிற 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசாரத்திலும் மே 23-ந் தேதியுடன் பிரதமர் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியாக பேசி வருகிறேன்.

இதை பொறுக்க முடியாத பா.ஜனதா மேலிட தலைவர்கள் கடைந்தெடுத்த அரசியல் கயமைத்தனம் மூலம் அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணி வைத்தது போல், இட்டுக்கட்டிய பேட்டிகளை கற்பனை குதிரைகள் போல் தட்டி விட்டு தி.மு.க.வை வம்புக்கு இழுக்க முயற்சிக்கிறார்கள். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி அந்த அளவுக்கு பா.ஜனதாவை மிரட்டி விட்டது. நரேந்திர மோடி உள்ளிட்ட மேலிட பா.ஜனதா தலைவர்களின் சுயநலனுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பகடைக்காயாக ஆக்கப்பட்டுள்ளார்.

தப்புக்கணக்கு

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இப்போது முதன் முதலாக என்னை வந்து பார்க்கவில்லை. இதற்கு முன்பும் வந்து சந்தித்து விட்டு சென்றிருக்கிறார். இந்த முறை அவர் சந்தித்து விட்டு சென்ற உடனே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து தெளிவான பத்திரிகை குறிப்பு வெளியிடப்பட்டது.

குழப்பவாதிகள் அப்போதாவது குறிப்பு அறிந்து இருக்க வேண்டும். ஆனாலும் மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு காது மூக்கு வைத்து, பூச்சூடி பொட்டு வைத்து வெளியில் விட்டால் தி.மு.க.வுக்கு விழும் சிறுபான்மையின வாக்குகளை நடைபெற இருக்கும் 4 இடைத்தேர்தல்களில் தடுத்து விடலாம் என்றும், நாடாளுமன்ற தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்திய தி.மு.க.வின் பிரசாரத்தை முனை மழுங்க செய்து விடலாம் என்றும் தப்புக்கணக்கு போட்டு தமிழிசை சவுந்தரராஜன் இந்த பேட்டியை திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு கொடுத்திருக்கிறார்.

பகிரங்க அறிவிப்பு

அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதை தமிழிசை சவுந்தரராஜன் வழிமொழிந்து இருக்கிறார் என்றால் ஊழல் அ.தி.மு.க.வை எப்படியாவது இந்த இடைத்தேர்தலிலாவது தோல்வியடைய விட்டுவிடக் கூடாது என்று போகாத ஊருக்கு பொய்யான வழி தேடியிருக்கிறார். “உனக்கு நான்”, “எனக்கு நீ” என்று ஊழல் அ.தி.மு.க.வும், மதவாத பா.ஜனதாவும் கச்சை கட்டிக்கொண்டு தி.மு.க. தலைமையிலான கொள்கை கூட்டணி குளத்தில் கல் எறியும் இந்த முயற்சி படுதோல்வி அடையும்.

அ.தி.மு.க-பா.ஜனதா போல் திரைமறைவில் தரகு பேசும் கட்சியல்ல தி.மு.க. கொள்கையை பகிரங்கமாக அறிவித்து யார் பிரதமர் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துக்கூறி, யார் பிரதமராக கூடாது என்பதை இன்னும் தெளிவாக எடுத்துரைத்து தேர்தலை சந்தித்து வருகிற கட்சி. அந்த வகையில்தான் இந்த நாடாளுமன்ற தேர்தலையும் தி.மு.க. சந்தித்துள்ளது.

விலக தயாரா?

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக கூடாது என்பதில் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதிலும், ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதிலும் அதைவிட இரட்டிப்பு மடங்கு உறுதியுடன் உள்ளது. ஆகவே, தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற போது நான் உறுதியளித்தது போல், இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசை 23-ந் தேதிக்கு பிறகு மாற்றி காட்டுவோம். முதுகெலும்பு இல்லாத அ.தி.மு.க. அரசை தூக்கி எறிவோம்.

தமிழிசை சவுந்தரராஜனோ அல்லது மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று ஆசைப்படும் நரேந்திர மோடியோ, மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் நான் கூட்டணி பேசி வருகிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். நிரூபிக்க தவறினால் நரேந்திர மோடியும், தமிழிசை சவுந்தரராஜனும் அரசியலை விட்டு விலக தயாரா?

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story