‘கமல்ஹாசனை இந்துக்கள் நடமாட விடமாட்டார்கள்’ மன்னார்குடி ஜீயர் பேட்டி


‘கமல்ஹாசனை இந்துக்கள் நடமாட விடமாட்டார்கள்’ மன்னார்குடி ஜீயர் பேட்டி
x
தினத்தந்தி 15 May 2019 11:51 PM GMT (Updated: 15 May 2019 11:51 PM GMT)

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் கூட்டணி வைத்துக்கொண்டு சர்ச்சை கருத்துகளை கூறிய கமல்ஹாசனை இந்துக்கள் நடமாட விடமாட்டார்கள் என்று மன்னார்புரம் ஜீயர் தெரிவித்தார்.

திருச்சி, 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்ரீரங்கம் கோவிலில் அதிக நகை

தமிழக இந்து கோவில்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், இந்து அறநிலையத்துறை ஆணையத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்தில் ஸ்ரீரங்கம் உள்பட பல கோவில்களில் அதிக நகை உள்ளது. ஏன்? திருப்பதியை விட அதிக அளவிலான நகை ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ளது. இதனை அரசு முழுமையாக கணக்கிட வேண்டும். இல்லையேல், திருவனந்தபுரம் கோவிலில் நகைகளை மூடிவைத்து தெரியாமல் போனதுபோல இங்கும் ஆகிவிடும்.

நடமாட விடமாட்டோம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ‘இந்து தீவிரவாதம்’ என பேசியது கண்டிக்கத்தக்கது. நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றது தவறுதான். பிரிவினை வாதத்திற்கு எதிராக நாதுராம் கோட்சே வைத்திருந்த தேசபக்தியால் நடந்தது. அது அவரது தனிப்பட்ட செயல்.

கமல்ஹாசன் தற்போது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் கூட்டணி வைத்து கொண்டு லஞ்சம் பெற்று, இந்து விரோதம் கொண்டு பேசிவருகிறார். இந்து தீவிரவாதி என பேசிய கமல்ஹாசனை இந்துக்கள் நடமாட விடமாட்டார்கள். எனவே, அவர் எங்கு சென்றாலும் அவருக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம். தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மட்டுமல்ல, எந்த ஒரு இந்து விரோதிக்கும் மன்னிப்பு கிடையாது.

கிறிஸ்தவராக மாறியவர் கமல்ஹாசன்

கமல்ஹாசன் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறி பல ஆண்டுகள் ஆகிறது. அவர் மட்டுமல்ல, சாருஹாசன், சுஹாசினி உள்ளிட்ட குடும்பத்தினரும் மாறிவிட்டனர். அதனால்தான், அவர் தொடர்ச்சியாக இந்துக்கள் பற்றி இழிவாக பேசிவருகிறார். அவரது கட்சியை தடை செய்யக்கோரி, அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story