உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான விதிமுறைகள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது


உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான விதிமுறைகள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது
x
தினத்தந்தி 16 May 2019 9:30 PM GMT (Updated: 16 May 2019 8:43 PM GMT)

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளை அமைப்பது குறித்த விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. முதலில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வது தொடர்பான வழிமுறைகளை அரசாணையாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு வாக்குச்சாவடிகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகளை அரசாணையாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தனித்தனியாக...

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் ஒரு வார்டில் 1,200 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் ஒரு வார்டில் 1,400 வாக்காளர்களும் இருந்தால் ஒரு வாக்குச்சாவடி அமைக்க வேண்டும்.

பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 1,200 முதல் 2,400 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 1,400 முதல் 2,800 வாக்காளர்களும் இருந்தால் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

இந்த வாக்காளர்கள் அனைவரும் ஒரு பகுதிக்குள் வந்தால் ஆண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், பெண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும் என தனித்தனியே அமைக்க வேண்டும்.

எண்ணிக்கை அதிகரித்தால்...

பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 2,400 முதல் 2,600 வாக்காளர்களும், மாநகராட்சிகளில் உள்ள ஒரு வார்டில் 2,800 முதல் 4,200 வாக்காளர்களும் இருந்தால் அந்த வார்டில் 3 வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும்.

இந்த வார்டில் இரண்டு பகுதிகள் இருந்தால் ஆண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், பெண்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், அனைத்து வாக்காளர்களுக்கும் ஒரு வாக்குச்சாவடி என்று மூன்று வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும்.

மூன்று பகுதிகளில் இருந்தால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அனைவரும் வாக்களிக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உறுதி அளிக்க வேண்டும்

வாக்குச்சாவடிகளுக்கான பட்டியலில் எந்த ஒரு வாக்காளர் பெயரும் விடுபடவில்லை என்று செயல் அலுவலர், நகராட்சி ஆணையர் ஆகியோர் உறுதி அளிக்க வேண்டும். மாநகராட்சிகளில் தயார் செய்யப்பட்ட வாக்குச்சாவடியின் பட்டியலில் இருந்து எந்த ஒரு வாக்காளரும் விடுபடவில்லை என்று வருவாய் அலுவலர் அல்லது மாநகராட்சி ஆணையர் உறுதி அளிக்க வேண்டும். இந்த பட்டியல், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர், 3-ம் நிலை நகராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகம், தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story