திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி; என்ஜினீயர் கைது


திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி; என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 9:24 PM GMT)

திருமணம் செய்வதாக ஆசை காட்டி பெண் டாக்டரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி,

திருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 34). சிவில் என்ஜினீயர். திருமணமான இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர், தன்னை டாக்டர் என்றும், திருமணம் ஆகாதவர் என்றும் அஜய், விதுட், விஜயகுமார், கிரிஜா சரவணன் என பல பெயர்களில் ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் போலியாக பதிவு செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம் நம்பர்-1 டோல்கேட் பிச்சாண்டார் கோவில் வி.என்.நகரை சேர்ந்த செல்வராஜ் மகள் தாமரைச்செல்வி (33). கணவரை இழந்த இவர், புள்ளம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரும், ஆன்லைனில் திருமண பதிவு செய்துள்ளார்.

ரூ.18¾ லட்சம் மோசடி

டாக்டர் என்று சக்கரவர்த்தி திருமண பதிவு செய்ததால் தாமரைச்செல்விக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சக்கரவர்த்தி முதல் திருமணம் செய்ததை மறைத்து, தாமரைச்செல்வியை திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

அதனை நம்பிய தாமரைச்செல்வி அவரிடம் நெருங்கி பழகினார். அப்போது ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் வரை தாமரைச்செல்வியிடம் இருந்து சக்கரவர்த்தி பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்கரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், அவர் போலி டாக்டர் என்ற விவரமும் தாமரைச்செல்விக்கு தெரியவந்தது.

கைது செய்தனர்

இதுபற்றி அவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்-யிடம் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸ் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய சக்கரவர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில், அவர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில், லால்குடி அனைத்து மகளிர் போலீசார் திருவண்ணாமலையில் உள்ள வீட்டில் இருந்த சக்கரவர்த்தியையும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது கார் டிரைவர் முருகனையும் கைது செய்தனர்.

டாக்டர்களை குறி வைத்து...

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் சார்பில் ஐகோர்ட்டு கிளையில் ஆஜராகி வாதாடிய, பெற்றோர் அறக்கட்டளை நிர்வாகி வழக்கறிஞர் ஜெயந்திராணி கூறுகையில், ‘சக்கரவர்த்தி டாக்டருக்கு படித்தது போல் போலியான ஆவணங்கள் தயாரித்து உள்ளார். மேலும் அவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டரையும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உள்ளார். பெண் டாக்டர்களை குறி வைத்தே அவர் மோசடிகளில் இறங்கி உள்ளார்.

இந்த வழக்கில் திருமண பதிவுகள் மோசடிக்கு சில ஆன்லைன் நிறுவனங்கள் உடந்தையாக இருந்திருப்பதால் அவற்றை முறைப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறி உள்ளேன். இந்த வழக்கில் ஜூன் 4-ந் தேதிக்குள் விசாரணை நடத்தி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது’ என்றார்.

Next Story