குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்


குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Jun 2019 7:59 PM GMT (Updated: 4 Jun 2019 7:59 PM GMT)

குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்று தமிழக அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணையில் குறைந்தது 90 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தால் மட்டும் தான் குறுவைக்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால் மேட்டூர் அணையில் இன்றைய (நேற்று) நிலவரப்படி 46 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் குறுவை சாகுபடிக்காக வருகிற 12-ந் தேதி மேட்டூர் அணையை திறப்பது சாத்தியமற்றதாகியுள்ளது.

இதேபோல கர்நாடக அணைகளில் இன்றைய நிலவரப்படி 13.92 டி.எம்.சி அளவுக்கு மட்டும் தான் தண்ணீர் உள்ளதால் அங்கிருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. தென்மேற்கு பருவமழை ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த சில வாரங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பெய்தால் மட்டும் தான் அடுத்தடுத்த மாதங்களில் அணைகள் நிரம்பும். இவை நடந்தால்தான் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட முடியும்.

தொகுப்பு திட்டம்

ஆகஸ்டு மாத முதல் வாரத்துக்கு முன்பாக குறுவை சாகுபடி செய்யப்பட்டால் தான் வட கிழக்கு பருவ மழைக்கு முன்பாக அறுவடை செய்ய முடியும். தாமதமாக குறுவை நடவு செய்யப்பட்டால் குறுவை பயிர்கள் வடகிழக்கு பருவமழையில் சிக்கி சேதமாகும் ஆபத்துள்ளது. எனவே இந்த காரணிகளையும் ஆய்வு செய்து பார்க்கும் போது நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யப்படுவதை ஊக்குவிப்பது தான் சாத்தியமான, புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.

நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதற்கு தமிழக அரசின் குறுவை தொகுப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த திட்டத்தின்கீழ் தடையற்ற மின்சாரம், உரம், விதைகள், ஜிப்சம், நுண்ணூட்டச்சத்து ஆகியவற்றுக்கான மானியங்களும் வழங்கப்படும் என்பதால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். அதனால் இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவேண்டும் என்று காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக செயல் படுத்தப்பட்டு வரும் குறுவை தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயன்உள்ளதாக இருப்பதால், இந்த ஆண்டும் அந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story