தென்காசியை மாவட்டமாக உருவாக்க பரிசீலனை - முதலமைச்சர் பழனிசாமி


தென்காசியை மாவட்டமாக உருவாக்க பரிசீலனை  - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 6 July 2019 3:34 PM GMT (Updated: 6 July 2019 3:34 PM GMT)

தென்காசி மக்களின் கோரிக்கையை ஏற்று நெல்லையை இரண்டாக பிரித்து தென்காசியை மாவட்டமாக உருவாக்க பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

நெல்லை தென்காசியில் அதிமுகவில் இசக்கி சுப்பையா இணையும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்த ஆட்சி கலைந்து விடும் என சிலர் கனவு கண்டனர். நெல்லை மாவட்டத்தில் அமமுகவின் கூடாரம் காலியாகி விட்டது.

ஒருபோதும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது.  நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அளித்து, திமுக வெற்றி பெற்றது.  நாங்குநேரி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று தர வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும், இரவு - பகல் பாராமல் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

தென்காசி மக்களின் கோரிக்கையை ஏற்று நெல்லையை இரண்டாக பிரித்து தென்காசியை மாவட்டமாக உருவாக்க பரிசீலனை செய்யப்படும்.

ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டு, குடிமராமத்து பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி ஏழை குடும்பங்களுக்கு இன்னும் 2 மாதங்களில் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், 

ஒரு தொண்டன் முதலமைச்சராவது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். தொண்டர்களால் நாங்கள் தொண்டர்களுக்காகவே நாங்கள. இனி அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் இணைப்பு விழா நடத்தப்படும். என்றார்.

Next Story