நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்த நிர்மலாதேவி


நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்த நிர்மலாதேவி
x
தினத்தந்தி 8 July 2019 11:42 AM GMT (Updated: 8 July 2019 11:42 AM GMT)

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

மதுரை.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி தற்போது கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆனால், சிபிசிஐடி வசமுள்ள இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மாணவிகளை பாலியல் பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் இவ்வழக்கில் நிர்மலாதேவி உயரதிகாரிகளுக்காக மாணவிகளிடம் பேசினார் என்று கூறும் சிபிசிஐடி போலீசார், அந்த உயரதிகாரிகள் யார் என்பதையும் குறிப்பிடவில்லை என்றார்.

இதற்கு அரசு தரப்பில் “ வழக்கு விசாரணை முறையாகவே நடைபெற்று வருகிறது என்றும் ஆகையால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜரானார்.  வழக்கின் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்பும் நீதிமன்றத்தை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்து உட்கார்ந்து இருந்தார்.

அருள்வாக்கு சொல்வதுபோல முணுமுணுத்த அவர், தனக்கு காலை 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து தான் விடுதலையாகிவிட்டதாகவும், தனக்கு எதிராக குற்றஞ்சாட்டிய மாணவிகள் தூக்குப்போட்டு இறந்து விட்டதாகவும் கூறி அதிர வைத்தார்.

தனது முடிகளை தானே வெட்டி அதனை தனது காதில் செருகிக்கொண்டும் அவர் அமர்ந்திருந்தார். நீண்ட நேரம் தியானத்தில் இருந்தவர், அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

Next Story