ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஓரிரு நாளில் ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது


ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஓரிரு நாளில் ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது
x
தினத்தந்தி 9 July 2019 11:35 PM GMT (Updated: 9 July 2019 11:35 PM GMT)

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஓரிரு நாளில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ராஜஸ்தானில் இருந்து 50 ரெயில் வேகன்கள் வந்து உள்ளன.

சென்னை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு விட்டன. 11 ஆயிரத்து 255 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த 4 ஏரிகளில் புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் வறண்டுவிட்டன. பூண்டி ஏரியில் மட்டும் வெறும் 17 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனையும் எடுத்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால் வீராணம், கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்து உள்ளது. இதற்காக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் இரவு-பகலாக நடந்து வருகிறது. அந்த பணிகளில் 95 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.

சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘வாட்டர் வேகன்’ நேற்று முன்தினம் காலை ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 6 மணிக்கு ஜோலார்பேட்டை சரக்கு ரெயில் நிற்கும் 5-வது யார்டை வந்தடைந்து. ஒவ்வொரு வேகனிலும் 54 ஆயிரம் லிட்டர் தண்ணீரை நிரப்ப முடியும். இந்த ரெயிலில் மொத்தம் 50 வேகன்கள் உள்ளன.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல கடந்த 10 நாட்களாக குழாய் பதிப்பது, தண்ணீர் சேமிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வந்தன. ஜோலார்பேட்டையில் தற்போது இந்தப்பணிகள் நிறைவடைந்து உள்ளன. தண்ணீர் கொண்டு செல்ல ராஜஸ்தானில் இருந்து வந்த 50 வேகன்கள் கொண்ட ரெயில் பார்சம்பேட்டையில் 5-வது யார்டு பகுதியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த வேகன்களில் தண்ணீர் நிரப்புவதற்காக 660 மீட்டர் நீளம் கொண்ட இணைப்பு குழாய்கள் பொருத்தப்பட்டு, தண்ணீர் நிரப்பப்படுகிறது. அப்பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீரை பம்பிங் செய்யும் சோதனை ஓட்டம் நேற்று மாலை தொடங்கியது. சோதனை வெற்றி அடைந்தால் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் பணிகள் உடனடியாக தொடங்கும்.

ரெயிலில் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இறக்குவதற்கான பணிகளும் நடந்து வருகிறது. குறிப்பாக வில்லிவாக்கம், ரெயில் நிலையம் அருகில் உள்ள வடக்கு ஜெகன்னாத் என்ற பகுதி வரை ரெயில் தண்டவாளம் அருகில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்தப்பணி முடிவடைந்த உடன் சென்னைக்கு ஓரிரு நாளில் தண்ணீர் கொண்டு வரப்படும்.

ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கம் வரை சுமார் 204 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதியை கடக்க 5 மணிநேரம் முதல் 7 மணி நேரம் வரை ஆகலாம் என்பதால் ஒரு நாளைக்கு 3 தடவையே சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர முடியும் அவ்வாறு ஒரு நாளைக்கு 3 முறை இயக்கப்பட்டால் 7.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது.

முதலில் 6 மாத காலத்திற்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் மேம்பட்ட உடன் சேவையை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 30 நாட்களுக்கு 3 முறை ரெயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் தமிழக அரசு ரெயில்வே துறைக்கு ரூ.7.74 கோடி வரை செலுத்த வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story