தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேரை தேர்ந்தெடுக்க தேர்தல் வைகோ வேட்புமனு ஏற்பு போட்டியின்றி தேர்வு ஆகிறார்கள்


தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேரை தேர்ந்தெடுக்க தேர்தல்  வைகோ வேட்புமனு ஏற்பு போட்டியின்றி தேர்வு ஆகிறார்கள்
x
தினத்தந்தி 10 July 2019 12:15 AM GMT (Updated: 9 July 2019 11:55 PM GMT)

மாநிலங்களவை தேர்தலில் வைகோ மனு ஏற்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சென்னை,

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதற்கான வேட்புமனு தாக்கல் 1-ந் தேதி தொடங்கி 8-ந் தேதி முடிந்தது.

தி.மு.க. சார்பில் மு.சண்முகம், பி.வில்சன் மற்றும் தி.மு.க.வுடன் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் 6-ந் தேதி வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டசபை செயலாளருமான கி.சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.

ஆனால் தேச துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது வேட்புமனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. எனவே தி.மு.க. தனது சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோவையும் களத்தில் இறக்கியது. 8-ந் தேதி அன்று என்.ஆர்.இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க. சார்பில் ந.சந்திரசேகரன், முகமது ஜான் மற்றும் அ.தி.மு.க.வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் 8-ந் தேதி அன்று வேட்புமனுக் களை தாக்கல் செய்தனர். இவர்கள் தவிர, கே.பத்மராஜன், கோ.மதிவாணன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன் மற்றும் சென்னை செம்பாக்கத்தைச் சேர்ந்த ந.நடராஜன் ஆகிய 4 பேர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். என்.ஆர்.இளங்கோ, மு.சண்முகம், பி.வில்சன் ஆகியோர் தலா 2 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு பரிசீலனை நேற்று நடந்தது. மொத்தம் 14 வேட்புமனுக்களை கி.சீனிவாசன் பரிசீலித்தார். நேற்று மாலை 3 மணிக்கு அவர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்காக வரப்பெற்ற 14 வேட்புமனுக்கள் நேற்று 11 மணிக்கு ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 7 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 4 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அந்த வகையில் வைகோ, மு.சண்முகம், பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, டாக்டர் அன்புமணி ராமதாஸ், ந.சந்திர சேகரன், முகமது ஜான் ஆகிய 7 பேரின் வேட்புமனுக்கள் செல்லத்தக்கவையாக அறிவிக்கப்படுகிறது.

கு.பத்மராஜன், கோ.மதிவாணன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், ந.நடராஜன் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6 எம்.பி.க்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், தற்போதைய நிலவரப்படி 7 வேட்பாளர்கள் போட்டிக்களத்தில் உள்ளனர். இதில், தி.மு.க. தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள என்.ஆர்.இளங்கோ தனது வேட்புமனுவை திரும்பப்பெறும் போது 6 பேர் மட்டுமே களத்தில் இருப்பார்கள்.

எனவே வாக்குப்பதிவு நடைபெறாமலேயே 6 காலியிடங்களுக்கு 6 பேரும் எம்.பி.க்களாக அறிவிக்கப்படுவார்கள். வேட்புமனுவை திரும்பப்பெற நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனு ஏற்கப்பட்டது குறித்து சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

லட்சோப லட்சம் தொண்டர்கள் எனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தியால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி முதல் கன்னியாகுமரியில் உள்ள கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் தொண்டன் வரை தாங்களே நாடாளுமன்றத்தில் பதவி பெற்று போவது போன்று மகிழ்கிறார்கள். இது தான் ம.தி.மு.க.வின் வலிமையாகும்.

நான் வெற்றி, தோல்விகளை சமமாக நினைப்பவன். உயர்வு, தாழ்வுகளை கடந்து செல்வது தான் வாழ்க்கை என்று கருதுகின்றவன். முடிவு வேறு விதமாக இருந்தாலும் அதையும் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை 55 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பெற்று இருக்கிறேன். ஊடகவியலாளர்களும், பத்திரிகையாளர்களும் நான் நாடாளுமன்றத்துக்கு செல்வதை எவ்வளவு விரும்பினார்கள் என்பது எனக்கு தெரியும்.

அரசியல் கட்சி எல்லைகளை கடந்து, சாதி-மத எல்லைகளை கடந்து தாய் தமிழகத்தின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஏக்கத்தோடு இருப்பவர்கள், இந்த பூமியில் தமிழனுக்கு என்று ஒரு தேசமாக ஈழ தேசம் இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் நான் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியதை நான் அறிவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story