வேலூர் மக்களவை தேர்தல்: 72% வாக்குகள் பதிவு - தேர்தல் அதிகாரி அறிவிப்பு


வேலூர் மக்களவை தேர்தல்: 72% வாக்குகள் பதிவு - தேர்தல் அதிகாரி அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2019 3:07 PM GMT (Updated: 5 Aug 2019 3:07 PM GMT)

வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 72 சதவீகிதம் வாக்கு பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வேலூர்,

தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இதனையடுத்து வேலூர் மக்களவை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் மந்தமாக இருந்த வாக்குபதிவு மதியத்திற்கு பின் விறுவிறுப்படைந்தது. இந்நிலையில் வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தமாக 72 சதவீகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 2 மக்களவை தேர்தலை விட 4% வாக்குப்பதிவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஆனது 9-ந்தேதி நடைபெறுகிறது.

Next Story