இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி


இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி
x
தினத்தந்தி 9 Oct 2019 12:00 PM GMT (Updated: 9 Oct 2019 12:00 PM GMT)

சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பிற்கு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக வரும் 11 ஆம் தேதி சென்னை வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபரும் சந்திக்க மாமல்லபுரத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் எனவும் இந்த சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த  சீன அதிபர் ஷி ஜின்பிங் அவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் இடையே அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள பேச்சு வார்த்தை, தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. 

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்தமைக்கு பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இவ்விரு உலகத்தலைவர்களையும் வரவேற்கின்றேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் சீனாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்பது வரலாறு. பண்டைய சீனநாட்டின் தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்பதும், அக்காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லபுரம், இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது என நான் கருதுகிறேன்.

சீனநாட்டுடன் கடல் வழி வியாபாரம் மாமல்லபுரம் வழியாக நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது. அதே போல், சோழர்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடர்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். ஏற்கனவே 1956-ஆம் ஆண்டு, மேதகு சீன நாட்டு பிரதமர்  சூ என்லாய், மாமல்லபுரம் அருகிலுள்ள குழிப்பான்தண்டலம் கிராமத்திற்கு வருகை தந்ததை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

இந்த இரு தலைவர்களின் சந்திப்பு யூனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது, பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்கது. 

சீன அதிபர் வருகை தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் மேதகு சீன நாட்டு குடியரசுத் தலைவர் திரு. ஷி ஜின்பிங் அவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story