தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 10 Oct 2019 12:07 PM GMT (Updated: 10 Oct 2019 12:07 PM GMT)

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவ மழை கடந்த 4 மாதங்களாக நீடித்து வந்துள்ள நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 20-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகம் மற்றும் புதுவையில் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 சென்டிமீட்டர் மழையும், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, நாமக்கல் நகர் பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கோவை மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை சென்னையில் உள்ள மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

Next Story