நடிகர் செந்தில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி சினிமா துறையை சேர்ந்தவர் கைது


நடிகர் செந்தில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி சினிமா துறையை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2019 11:00 PM GMT (Updated: 1 Nov 2019 9:46 PM GMT)

நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த சினிமா துறையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

தமிழ் திரைப்பட காமெடி நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டிடம், சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், பாஸ்கர் காலனி, 3-வது தெருவில் உள்ளது. மொத்தம் 10 அறைகள் கொண்ட அந்த கட்டிடத்தை 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (வயது 52) என்பவர் மாதம் ரூ.2½ லட்சம் வாடகைக்கு எடுத்து இருந்தார்.

கடந்த சில மாதங்களாக சகாயராஜ், செந்திலுக்கு வாடகை பணம் தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடிகர் செந்தில், கட்டிடத்தை நேரில் சென்று பார்த்தார்.

அப்போது அந்த கட்டிடத்தை தன்னிடம் வாடகைக்கு எடுத்த சகாயராஜ், அது தனக்கு சொந்தமானது என்று கூறி அதில் உள்ள 7 அறைகளை மேல் வாடகை மற்றும் குத்தகைக்கு விட்டு கூடுதல் பணம் பெற்று இருப்பது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில், இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில் சகாயராஜ், நடிகர் செந்திலின் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டது உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து விருகம்பாக்கத்தில் பதுங்கி இருந்த சகாயராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான சகாயராஜ், சினிமா துறையில் புரொடக்சன் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story