இடைத்தேர்தல் வெற்றி; வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்துகிறது அ.தி.மு.க.


இடைத்தேர்தல் வெற்றி; வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடத்துகிறது அ.தி.மு.க.
x
தினத்தந்தி 2 Nov 2019 3:42 PM GMT (Updated: 2 Nov 2019 3:42 PM GMT)

இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி பற்றிய அறிவிப்பினை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது.

சென்னை,

நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதிக்கு கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 66.35 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த ராதாமணி உடல்நல குறைவால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி இறந்தார். இதையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் 21-ந்தேதி நடைபெற்றது. இந்த தொகுதியில் முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.), புகழேந்தி (தி.மு.க.), கந்தசாமி (நாம் தமிழர் கட்சி) மற்றும் 9 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.

இத்தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 84.41 சதவீதம் வாக்குகள் பதிவாகின.  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த 24ந்தேதி நடந்தது.  இதில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் முறையே ரெட்டியார்பட்டி நாராயணன் மற்றும் முத்தமிழ்செல்வன் வெற்றி பெற்றனர்.

இதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.  இதன்படி, நாங்குநேரியில் வருகிற 5ந்தேதியும், விக்கிரவாண்டியில் வருகிற 8ந்தேதியும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Next Story