விக்கிரவாண்டி அருகே விஷவண்டு கடித்து முன்னாள் எம்.எல்.ஏ. சாவு


விக்கிரவாண்டி அருகே விஷவண்டு கடித்து முன்னாள் எம்.எல்.ஏ. சாவு
x
தினத்தந்தி 2 Nov 2019 9:00 PM GMT (Updated: 2 Nov 2019 8:26 PM GMT)

விக்கிரவாண்டி அருகே விஷவண்டு கடித்து முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழந்தார்.

விக்கிரவாண்டி,

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 67). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் புதுச்சேரி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும் அரியாங்குப்பம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இவர் கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை பதவி வகித்து உள்ளார்.

இவருக்கு தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இவர் தினமும் காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சிறுவள்ளிக்குப்பத்தில் உள்ள தனது நிலத்திற்கு வந்து பார்வையிட்டு விவசாய பணி செய்து வந்தார்.

விஷவண்டு கடித்து சாவு

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் புருஷோத்தமன் தனது நிலத்திற்கு சென்று விவசாய பணியில் ஈடுபட்டார். மதிய வேளையில் அப்பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் அங்குள்ள மரத்தின் அருகே அவர் ஒதுங்கி நின்றார்.

அப்போது அந்த மரத்தில் இருந்த விஷவண்டு புருஷோத்தமனை கடித்தது. இதில் அவர் அதே இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது உதவியாளர் செங்கேணி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Next Story