காவிக்கூட்டம் வள்ளுவரை கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் - மு.க.ஸ்டாலின் டுவீட்


காவிக்கூட்டம் வள்ளுவரை கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் - மு.க.ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:44 AM GMT (Updated: 3 Nov 2019 10:44 AM GMT)

வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் நவம்பர் 1-ம் தேதி வெளியிட்ட பதிவில் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்து டுவீட் செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவில்,
 
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்?, என்று பாஜக டுவீட் செய்து இருந்தது.
மேலும், அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுகளும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது. 

இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதில் கூறியிருப்பதாவது:-

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம். எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Next Story