கடல் கடந்து மலர்ந்த காதல்: சீன பெண்ணை கரம் பிடித்த சேலம் டாக்டர் - தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது


கடல் கடந்து மலர்ந்த காதல்: சீன பெண்ணை கரம் பிடித்த சேலம் டாக்டர் - தமிழ் முறைப்படி திருமணம் நடந்தது
x
தினத்தந்தி 3 Nov 2019 8:45 PM GMT (Updated: 3 Nov 2019 8:17 PM GMT)

ஆஸ்திரேலியா அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சேலம் டாக்டர், சீன பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சேலம்,

சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மணக்காடு அன்பு நகரை சேர்ந்தவர் பரசுராமன். இவருடைய மகன் அருண்பிரசாத் (வயது 34). ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், அங்கு உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சீனாவை சேர்ந்த கிறிஸ்டல் ஜியாங் (31) என்ற பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

அவர்கள் இருவரும், பகுதிநேரமாக ஆஸ்திரேலிய நாட்டில் வேறு ஒரு இடத்தில் வேலை பார்க்கும்போது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது.

அருண்பிரசாத், கிறிஸ்டல் ஜியாங்கிடம் தனது காதலை தெரிவித்தார். முதலில் காதலுக்கு மறுத்த கிறிஸ்டல் ஜியாங் பின்னர் காதலிக்க தொடங்கினார். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.

இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்த அருண்பிரசாத், சீன பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். இதற்கு அவர்கள் சம்மதம் தெரித்தனர். இதேபோல் கிறிஸ்டல் ஜியாங் அவருடைய பெற்றோரிடம் சம்மதம் பெற்றார்.

இவர்களது திருமணம் தமிழ் முறைப்படி கிறிஸ்தவ முறையில் நேற்று காலை சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் நடந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில் அருண் பிரசாத்தின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிறிஸ்டல் ஜியாங்கின் பெற்றோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சீனாவில் இருவருக்கும் திருமண வரவேற்பு நடத்த உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Next Story