ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Nov 2019 9:15 PM GMT (Updated: 3 Nov 2019 8:21 PM GMT)

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஈரோடு,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசாரும், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டனர்.

ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலமாக பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீசார் சோதனையிட்டனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், மோப்ப நாய் கயல் வரவழைக்கப்பட்டது. ஈரோடு ரெயில் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள கடைகளிலும் தீவிரமாக சோதனை நடந்தது.

ஈரோட்டுக்கு வந்த ரெயில்களிலும் போலீசார் ஏறி சோதனையிட்டனர். சோதனையில் மர்மபொருள் எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர், தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவில், சென்னகேசவ பெருமாள் கோவில், அதியமான்கோட்டம் மற்றும் அதியமான்கோட்டை போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளுக்கு போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சென்று சோதனை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story