எனக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் மகளை அனுப்பினேன் -பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்


எனக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் மகளை அனுப்பினேன் -பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்
x
தினத்தந்தி 16 Nov 2019 8:47 AM GMT (Updated: 16 Nov 2019 8:47 AM GMT)

எனக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் மகளை அனுப்பினேன் என பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கூறினார்.

சென்னை

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை  செய்து கொண்ட விவகாரத்தில் அவரது தந்தை அப்துல் லத்தீப் மற்றும் உறவினரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி பாத்திமா தொடர்பான ஆவணங்களை காவல்துறையிடம் தாக்கல் செய்ய பாத்திமாவின் பெற்றோருக்கு போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

காலை எட்டு மணிக்கு தொடங்கி 11 மணி வரை சுமார் 3 மணி நேரம் நீடித்த விசாரணைக்கு பின்னர்,  பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். அனைத்து ஆவணங்களையும் காவல்துறை வசம் அளித்துள்ளோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை என காவல்துறை உறுதி அளித்துள்ளது.  விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு பிடித்த ஊர் சென்னை என்பதால் மகளை அனுப்பினேன்.

தமிழகத்தில் தான் படிக்க வேண்டுமென பாத்திமா விரும்பினாள், பனராஸ் பல்கலையில் இடம் கிடைத்தும் பாத்திமா சேரவில்லை. பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தேவைப்பட்டால் பாத்திமாவின் சகோதரி விசாரணைக்கு ஆஜராவார்.  என்னிடம் இருந்த ஆவணங்களை கொடுத்துள்ளோம், எங்களுக்கு ஏற்பட்ட நிலை, வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது.

பாத்திமா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்புள்ள 28 நாட்களுக்கான டைரி குறிப்புகளும், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் தங்களிடம் பேசிய ஆடியோவையும் விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், விசாரணை முடியும் வரை சென்னையில் தங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Next Story