மாணவி பாத்திமா மரணம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு


மாணவி பாத்திமா மரணம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 22 Nov 2019 7:28 AM GMT (Updated: 22 Nov 2019 7:28 AM GMT)

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

சென்னை, 

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த கேரள மாணவி பாத்திமா கடந்த 8-ந் தேதி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.

தன்னுடைய சாவுக்கு சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்பட பேராசிரியர்கள் தான் காரணம் என்று மாணவி பாத்திமா செல்போனில் பதிவிட்ட தகவல் அடிப்படையில், அந்த 3 பேரிடம் கோட்டூர்புரம் போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள்.

மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் குறிப்பிட்ட 3 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டார்கள்.

இந்த நிலையில் ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  சி.பி.ஐ.யில் பணியாற்றிய அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு குழுவில் இடம் பெற்றுள்ளதாக அரசு தகவல் தெரிவித்தது. இந்த  வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Next Story